
அறன்நோக்கி ஆற்றும்கொல் வையம் புறன்நோக்கிப்
புன் சொல்உரைப்பான் பொறை. – குறள்: 189
– அதிகாரம்: புறம் கூறாமை, பால்: அறம்
கலைஞர் உரை
ஒருவர் நேரில் இல்லாதபோது பழிச்சொல் கூறுவோனுடைய உடலை ‘இவனைச் சுமப்பதும் அறமே’ என்று கருதித்தான் நிலம் சுமக்கிறது.
ஞா. தேவநேயப் பாவாணர் உரை
பிறர் இல்லாத சமயம் பார்த்து அவரைப் பழித்துரைக்கும் புறங் கூற்றாளனது உடலைப் பொறுத்தலை; மாநிலம் தனக்கு அறமென்று கருதிச் செய்யும் போலும்!
மு. வரதராசனார் உரை
ஒருவர் நேரில் இல்லாதது கண்டு பழிச்சொல் கூறுவோனுடைய உடல்பாரத்தை, `இவனையும் சுமப்பதே எனக்கு அறம்’ என்று கருதி நிலம் சுமக்கின்றதோ?
G.U. Pope’s Translation
‘Tis charity, I ween, that makes the earth sustain their load, Who, neighbours’ absence watching, tales or slander tell abroad.
– Thirukkural: 189, Not Backbiting, Virtues
Be the first to comment